பறவைகளும் நானும் ஓரினம்
பச்சை வண்ணக் கிளியே... உனக்கு
செந்நிற மூக்கு எங்கிருந்து வந்தது?
பிரவுன் நிற மைனாவே... உன்
வண்ணச் சிறகுக்கு யார் வண்ணம் கொடுத்தது?
மஞ்சள் மூக்கும், கண் மஸ்காராவும்
உனக்கு யார் போட்டது?
காகமே... நீ கருப்புதான்,
இருந்தாலும் நீ அழகுதான்!
கரியநிறக் காகமே, உன்னைப் பார்க்கையில்
உன் நிறத்தைக் கடனா தருவாயோ?
என் கூந்தலுக்கு நான் கருமை சேர்த்துக்கொள்வேன்!
குயிலே, குயிலே... பாடும் அழகுக் குயிலே,
உன் குரலைக் கொஞ்சம் தருகிறாயா?
கிளிப் பேச்சு கேட்கும் மனிதர்,
இன்னொரு மனிதன் பேச்சுக்குக் காது கொடுப்பதில்லை!
சிங்கார சிட்டுக்குருவியே...
உன்னைப் பார்க்கையில் தோன்றும் ஆசையிது,
நானும் நீங்களும் ஓரினம்தானே...
சில காலம் உங்கள் சிறகுகளைக் கடனா தருவீர்களா?
உங்களைப் போல ஆனந்தமாய்ச் சிறகடித்து,
உயர உயரப் பறக்க எனக்கும் ஆசை!
உற்சாகமாய் இந்த ஊரையே ஒரு சுற்று
சுற்றி வர எனக்கும் ஆசை!